சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தாவைப் (Nithyananda) பிடிக்க குஜராத் போலீஸ் (Gujarat Police) முயன்று வருகிறது. அவரைப் பிடிக்க வெளியவுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பிற அரசு அமைப்புகளின் உதவியையும் கோரியுள்ளது குஜராத் போலீஸ். சமீபத்தில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை தன் பிடியில் வைத்திருப்பதாக நித்தியானந்தா மீது குஜராத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் அவர் தற்போது தேடப்பட்டு வருகிறார்.
நித்தியானந்தா, நாட்டைவிட்டுத் தப்பித்துச் சென்றுவிட்டதாக சந்தேகிக்கும் குஜராத் போலீஸ், அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறது.
இது குறித்து அகமதாபாத் எஸ்.பி, ஆர்.வி.அசாரி, “நாங்கள் நித்தியானந்தா மீதும், அவரது இரு பக்தர்களான சாத்வி பிரான் பிரியானந்தா மற்றும் பிரியாடாட்வா ரித்தி கிரண் ஆகியோர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளோம். 4 குழந்தைகளை அவர்கள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குழந்தைகளை அவர்கள், தங்கள் பிடியில் சட்டத்துக்கு விரோதமாக வைத்துக் கொண்டு, தங்கள் ஆசிரமத்திற்காக நிதி திரட்ட பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது,” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்து பேசும்போது, “பல்வேறு அரசு அமைப்புளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். நாங்கள் வெளியவுறவுத் துறை அமைச்சகத்துடனும் தொடர்பில்தான் இருகிறோம்,” என்றார்.